Archives: ஆகஸ்ட் 2020

வேலையாள் செவிகொடுக்கின்றான்

கம்பியில்லா ரேடியோ தொடர்பு சாதனம் இயங்கும் நிலையில்  இருந்திருந்தால், அவர்கள் டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கின்றது என்பதை அறிந்திருப்பார்கள். மற்றொரு கப்பலில் இருந்த ரேடியோ இயக்குபவர் சிரில் இவான்ஸ் என்பவர், டைட்டானிக் கப்பலின் ரேடியோ இயக்குபவர் ஜாக் பிலிப்ஸ் என்பவருக்கு, அவர்களின் கப்பல் ஒரு பனிப்பாறையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக, ஒரு செய்தியை அனுப்பினார். ஆனால் அந்த ரேடியோ இயக்குபவர், பிரயாணிகளின் செய்திகளை அனுப்புவதில் தீவிரமாக இருந்ததால், கோபத்தில் அமைதியாக இருக்குமாறு செய்தி அனுப்பினார். இதனால் வருத்தமடைந்த அந்த ரேடியோ இயக்குபவர் தன்னுடைய ரேடியோ சாதனத்தை மூடி விட்டு தூங்கச் சென்று விட்டார். 10 நிமிடங்கள் கழித்து டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதியது. அவர்களின் துயரக் குரல் பதிலளிக்கப் படாமல்போய் விட்டது, அதனை யாருமே கவனிக்கவில்லை, கேட்கவில்லை.

 இஸ்ரவேலின் ஆசாரியர்கள் பரிதானத்துக்கு அடிமைப் பட்டு, தங்களின் ஆவிக்குரிய வாழ்வை இழந்ததையும், தேசம் ஆபத்தை நோக்கி இழுக்கப்படுவதையும் குறித்து 1 சாமுவேல் புத்தகத்தில் வாசிக்கின்றோம். “அந்நாட்களில் கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை” (1 சாமு. 3:1) என்பதாகக் காண்கின்றோம். ஆனாலும் தேவன் அவருடைய ஜனங்களைக் கைவிடவில்லை. அவர், கர்த்தருடைய ஆசாரியனின் வீட்டில் வளர்க்கப்பட்ட ,சாமுவேல் என்ற ஒரு சிறுவனிடம் பேசுகின்றார். சாமுவேல் என்ற பெயருக்கு “தேவன் செவிகொடுக்கின்றார்” என்று அர்த்தம். அவனுடைய தாயாரின் ஜெபத்திற்கு தேவன் பதிலளித்தார் என்பதின் நினைவாக அப்பெயரிடப் பட்டான். தேவனுக்குச் செவிகொடுக்க சாமுவேல் கற்றுக் கொள்ள வேண்டும்.

“சொல்லும்; அடியேன் கேட்கிறேன்” (வ.10). இங்கு வேலையாள் கேட்கிறான். வேதாகமத்தின் மூலம் வெளிப்படுத்தப்படும் காரியங்களுக்கு செவிகொடுக்கவும் கீழ்ப்படியவும் நாம் தெரிந்து கொள்வோம். நம்முடைய வாழ்வை அவருக்கு ஒப்புக் கொடுப்போம். தங்களின் “ரேடியோக்களை” இயங்கும் நிலையில் வைத்திருக்கும்- தாழ்மையுள்ள அடிமையின் ரூபத்தை நாம் தரித்துக் கொள்வோம்.

தற்பரிசோதனை

சமீபத்தில், இரண்டாம் உலகப் போரின் போது, என்னுடைய   தந்தை என்னுடைய தாயாருக்கு அனுப்பி வைத்த கடிதங்களைப்  படித்தேன். அவர் வட ஆப்ரிக்காவில் இருந்தார், என் தாயார் அமெரிக்காவில் இருந்தார். என்னுடைய தந்தை, அமெரிக்க இராணுவத்தில் இளம் நிலை அதிகாரியாக இருந்தார், இராணுவ வீரர்களின் கடிதங்களை தணிக்கை செய்யும் பொறுப்பைப்    பெற்றிருந்தார். மிக முக்கியமான செய்திகள் எதிரிகளைச் சேராதபடி காப்பதற்காக இதனைச் செய்தார். அக்கடிதங்களைப் பார்ப்பதற்கு சற்று வேடிக்கையாகவே இருந்தது.  தன் மனைவிக்கு எழுதிய அக்கடிதத்தின் வெளிப்பக்கத்தில், “இரண்டாம் நிலை அதிகாரி ஜாண் பிரானன் (என்னுடைய தந்தையின் பெயர்) அவர்களால் தணிக்கை செய்யப்பட்டது” என்று முத்திரையிடப்பட்டிருந்தது. தன்னுடைய  சொந்த கடிதத்திலேயே சில வரிகளை அடித்திருந்தார்!

சுய தணிக்கை என்பது, நம் அனைவருக்குமே நன்மையானது. வேதாகமத்தில் அநேக இடங்களில் அதை எழுதியவர்கள், நம்மிடத்தில் சரியில்லாதவை எவை, தேவனுக்கு மகிமையைத் தராதவை எவை என நம்மை நாமே சோதிப்பதின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகின்றனர். சங்கீதக்காரன், “தேவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்து கொள்ளும் ……..வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பாரும்” (சங்.139:23-24) என்கின்றான். எரேமியா அதனை இவ்வாறு கூறுகின்றார். “நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து, ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக் கடவோம்” (புல.3:40) என்கின்றார். திரு விருந்தில் பங்கேற்கும் முன்பு, “எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்து அறிந்து கொள்ள வேண்டும்” (1 கொரி.11:28) என்று பவுல் நம்முடைய இருதயத்தைக் குறித்துக் கூறுகின்றார்.

தேவனுக்குப் பிரியமில்லாத எந்தச் செயலையும், எந்த மனப்பான்மையையும் விட்டு திரும்புவதற்கு பரிசுத்த ஆவியானவர் உதவிசெய்வார். எனவே நாம் இந்த உலகத்தினுள் நுழைவதற்கு முன்பாக, நாம் நின்று ஆவியானவரின் உதவியோடு சுய சோதனை செய்வோம், அதன் மூலம் நாம் அவரோடு ஐக்கியமாகும்படி, “தேவனிடம் திரும்புவோம்”.

மிகச் சிறந்த அலை

“அலையை” ஏற்படுத்த மக்கள் விரும்புவர்.  உலகெங்கும் நடைபெறும் விளையாட்டு நிகழ்ச்சிகளிலும், இசைக் கச்சேரிகளிலும் ஒரு சில மக்கள் எழுந்து நின்று, தங்கள் கைகளை உயர்த்தி அசைக்கின்றனர், இதுவே ஆரம்பம், சில நொடிகளில், அவர்களின் அருகில் அமர்ந்திருப்பவர்களும் எழுந்து அதனையே செய்கின்றனர். இலக்கு என்னவெனில், ஓர் அசைவு தொடர்ச்சியாகப் பரவி, முழு அரங்கையும் அசையச் செய்வதேயாகும். அது அரங்கத்தின் கடைசி முனையை எட்டியதும், அதனைத் தொடங்கியவர் சிரித்து ஆர்ப்பரிக்கின்றார், தொடர்ந்து அசைவுகளை போய்க் கொண்டிருக்கச் செய்கின்றார்.

முதல் முதலாக பதிவு செய்யப்பட்ட அலை நிகழ்வு, 1981 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு விளையாட்டு நிகழ்வில் ஏற்படுத்தப் பட்டது. இத்தகைய அலையில் பங்கு பெற நான் விரும்புகின்றேன், ஏனெனில் அது வேடிக்கையாக இருக்கும். இந்த அலையைச் செய்யும் போது, நமக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியும், ஒன்றிணைவதும் சுவிசேஷத்தைப் பிரதிபலிக்கின்றது- இயேசுவில் நாம் பெறுகின்ற இரட்சிப்பு என்கின்ற நற்செய்தி, எங்கும் உள்ள விசுவாசிகள் அனைவரையும் அவரைப் போற்றுவதிலும் நம்பிக்கையிலும் ஒன்றிணைக்கின்றது. இந்த “முழுமையான அலை” இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு எருசலேமில் துவங்கியது. கொலோசே சபை அங்கத்தினர்களுக்கு பவுல் எழுதும் போது, இதனைக் குறித்து, “அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும் பரம்பிப் பலன் தருகிறது போல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக் கேட்டு, தேவக் கிருபையைச் சத்தியத்தின்படி அறிந்து கொண்ட நாள் முதல், அது உங்களுக்குள்ளும் பலன் தருகிறதாயிருக்கிறது” (கொலோ.1:6) என்கின்றார். இந்த நற்செய்தி தருகின்ற பலன் என்னவெனின், பரலோகத்தில் உங்களுக்காக (நமக்காக) வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம் பெற்றுள்ள, கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள விசுவாசமும் அன்பும் ஆகும் (வ.3-4).

இயேசுவின் விசுவாசிகளாகிய நாம், சரித்திரத்திலேயே மிகப் பெரிய அலையில் பங்கெடுக்கின்றோம். அதனைத் தொடர்ந்து செய்வோம்! நாம் அனைவரும் அதனை நிறைவேற்றி முடிக்கும் போது, அதைத் துவக்கியவரின் முகத்தில் ஏற்படும் சிரிப்பைக் காண்போம்.

தேவன் நம்மை விடுவிப்பவர்

சைக்கிள், ஓட்டம், நீச்சல் ஆகிய மூன்று நிகழ்வுகளை உள்ளடக்கிய  (டிரையத்லான்) போட்டியில் கலந்து கொள்பவர்களில், பயந்து விடும் நீச்சல் வீரர்களை காப்பாற்றும்படி, மீட்பவர் ஒருவர் கடற்பரப்பில் தன்னுடைய படகில் தயாராக இருந்தாள். “படகின் மையப்பகுதியை பற்றிப் பிடிக்காதீர்கள்!” என்று நீச்சல் வீரர்களிடம் கத்தினாள், ஏனெனில் அத்தகைய ஒரு காரியம் அவளுடைய படகையும் கவிழ்த்திவிடும் என்பதை அவள் அறிந்திருந்தாள். ஆனால், அந்த சோர்வடைந்த வீரர்களை முன்பக்கதிற்கு, அல்லது துடுப்பின் அருகில் வருமாறு வழிகாட்டினாள். அங்கே அவர்கள் ஒரு வளையத்தைப் பற்றிக் கொள்ள முடியும், அவர்களை மீட்பவரும் உதவுவதற்கு வசதியாக இருக்கும்.

எப்பொழுதெல்லாம் வாழ்வு அல்லது மக்கள் நம்மை கீழே இழுத்துவிடும் அச்சுறுத்தல் கொடுக்கும் போது, இயேசுவின் விசுவாசிகளாகிய நமக்கு மீட்பர் ஒருவர் இருக்கின்றார் என்பதை நினைவில் கொள்ளுவோம். “கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்………………… அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பி வரப்பண்ணுவேன்” (எசே.34:11-12) என்கின்றார்.

சிறைப் பட்டுப் போன தேவனுடைய ஜனங்களுக்கு எசேக்கியேல் தீர்க்கதரிசி தரும் உறுதிப்பாடு இதுவே. அவர்களுடைய தலைவர்கள் அவர்களைத் தள்ளி, ஏமாற்றினார்கள், அவர்களுடைய வாழ்க்கையை கொள்ளையிட்டு, மேய்ப்பர்கள் (தேவனுடைய) மந்தையை மேய்க்காமல், “தங்களையே மேய்த்தார்கள்” (வ.8). அதன் விளைவாக,  “பூமியின் மீதெங்கும் என் ஆடுகள் சிதறித்திரிகிறது; விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை” என்று தன்னுடைய ஜனங்களைக் குறித்து தேவன் கூறுகின்றார் (வ.6).

“என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (வ.15), அவருடைய இந்த வாக்கு இன்றைக்கும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

நாம் செய்ய வேண்டியது என்ன? சர்வ வல்ல தேவனையும், அவருடைய வாக்குத்தத்தத்தையும் உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும். “நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்” (வ.11) என்பதாக அவர் கூறுகின்றார். இதுவே ஊறுதியாகப் பற்றிக் கொள்ளத் தகுந்த மீட்பளிக்கும் வாக்கு.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஜெபம் முக்கியமானது

“நடக்கவிருக்கும் மூளை ஸ்கேனுக்கான பிரார்த்தனைகள்;” “என் குழந்தைகள் மீண்டும் தேவாலயத்திற்கு வரவேண்டும்;“ “தன் மனைவியை இழந்த டேவின் ஆறுதலுக்காக" இதுபோன்ற ஜெப விண்ணப்பங்களை எங்களின் ஜெப ஊழியக் குழு வாரந்தோறும் பெறுகிறது. நாங்கள் அதற்காக ஜெபித்து, பதில் கடிதத்தையும் அனுப்புவது வழக்கம். ஜெப விண்ணப்ப பட்டியல் பெரிதாய் இருப்பதினால், எங்களுடைய முயற்சி கவனிக்கப்படாத வகையில் சிலவேளைகளில் இருக்கும். ஆனால் சமீபத்தில் டேவ் என்பவர் இறந்துபோன தன்னுடைய மனைவியின் இரங்கல் செய்தியின் நகலுடன், ஓர் நன்றிக் கடிதத்தையும் வைத்து அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த பின்பு எங்களுடைய சோர்வான சிந்தை மாறியது. ஜெபம் மிகவும் அவசியம் என்பதை நான் புதிதாக உணர்ந்தேன்.

நாம் ஊக்கமாக, இடைவிடாமல், நம்பிக்கையுடன் ஜெபிக்கவேண்டும் என்று இயேசு முன்மாதிரியாகக் கூறினார். பூமியில் அவருடைய வாழ்ந்த காலம் குறைவாகவே இருந்தது. ஆனால் அவர் ஜெபிப்பதற்காக தனி நேரம் செலவழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் (மாற்கு 1:35; 6:46; 14:32).

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலின் ராஜாவான எசேக்கியாவும் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டார். ஓர் வியாதியின் நிமித்தம் அவர் சீக்கிரம் மரிக்கப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது (2 இராஜாக்கள் 20:1). எசேக்கியா வேதனையோடும் வியாகுலத்தோடும், “தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு” (வச. 2) கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினார். இந்த விஷயத்தில் தேவன் உடனே பதில்கொடுக்கிறார். தேவன் எசேக்கியாவின் வியாதியை சுகமாக்கி, அவருக்கு பதினைந்து ஆண்டுகள் ஆயுசுநாட்களை பெருகப்பண்ணி, அவருடைய எதிரிகளிடமிருந்து இளைப்பாறுதலையும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 5-6). எசேக்கியா நல் வாழ்க்கை வாழ்ந்தார் என்பதற்காக தேவன் இந்த கிருபைகளை அவருக்குக் கொடுக்கவில்லை, மாறாக, “என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும்” தேவன் அவருக்கு கிருபையளிப்பதாக கூறுகிறார். நாம் கேட்கிற அனைத்தையும் தேவனிடத்திலிருந்து பெறாமல் இருக்கலாம், ஆனால் தேவன் நம்முடைய அனைத்து ஜெபங்களையும் கேட்டு கிரியை நடப்பிக்கிறவராயிருக்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.

 

நாம் நம்பத்தகுந்த சிருஷ்டிகர்

மேரி ஷெல்லியின் “ஃபிராங்கண்ஸ்டைன்” என்ற பிரபல நாவலில் உள்ள “அரக்கன்” மிகவும் பரவலாக அறியப்பட்ட இலக்கிய பாத்திரங்களில் ஒன்றாகும். ஆனால் அந்த நாவலை ஆழமாய் படித்தவர்கள், அந்த அரக்கனை தோற்றுவித்த மாயை விஞ்ஞானியான விக்டர் ஃபிராங்கண்ஸ்டைனையே உண்மையான அரக்கனாக ஷெல்லி சித்தரிக்கிறார் என்று அறிவர். புத்திசாலித்தனமான உயிரினத்தை உருவாக்கிய பிறகு, விக்டர் அதற்கு வழிகாட்டுதல், தோழமை அல்லது மகிழ்ச்சியின் நம்பிக்கையை கொடுக்க மறுக்கிறார். அந்த உயிரினம், விரக்தி மற்றும் கோபப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஓர் தருணத்தில் அந்த உயிரினம் விக்டரைப் பார்த்து, “என் படைப்பாளியே, நீ என்னை துண்டு துண்டாக கிழித்து வெற்றி பெறும்” என்று கூறுவதைப் பார்க்கமுடியும். 

ஆனால் தன் படைப்புகள் மது தீராத அன்புகொண்ட மெய்யான சிருஷ்டிகர் எப்பேற்பட்டவர் என்பதை வேதம் வெளிப்படுத்துகிறது. ஏதோ சிருஷக்கவேண்டும் என்பதற்காக தேவன் உலகத்தை படைக்கவில்லை, மாறாக, அதை அழகாகவும் நேர்த்தியாகவும் படைத்திருக்கிறார் (ஆதியாகமம் 1:31). ஆனால் கொடூரமான தீமையைத் தேர்ந்தெடுக்க மனிதகுலம் அவரிடமிருந்து திசைமாறியபோதும், மனிதகுலத்திற்கான தேவனுடைய அர்ப்பணிப்பும் அன்பும் மாறவில்லை.

நிக்கோதேமுக்கு இயேசு விளக்கியதுபோல், தன்னுடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்காய் பலியாய் கொடுக்குமளவிற்கு இந்த உலகத்தின்மீதான தேவனுடைய அன்பு விலையேறப்பெற்றது (யோவான் 3:16). இயேசு தம்மையே பலியாய் ஒப்புக்கொடுத்து, நம்முடைய பாவத்தின் விளைவுகளைச் சுமந்துகொண்டு, “தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு” (வச. 15) நம்மை உயர்த்துகிறார். 

நாம் மனப்பூர்வமாய் நம்பக்கூடிய ஓர் சிருஷ்டிகர் நமக்கு இருக்கிறார். 

 

இயேசுவின் அதிகாரம்

பல வருடங்களாக போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்த என் மகன் ஜியோப்பை இயேசு விடுவித்த பிறகும், எனக்கு இன்னும் சில கவலைகள் இருந்தது. நாங்கள் ஒன்றாக இருந்தாலும், அவனுடைய எதிர்காலத்தைவிட அவனுடைய கடினமான கடந்த காலத்தைக் குறித்து நான் அதிக கவலைப்பட்டேன். போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் பெற்றோர்கள் அவர்களை மீண்டும் மீண்டும் சரிசெய்யவேண்டிய அவலம் ஏற்படுகிறது. ஓர் குடும்பக் கூடுகையில் நான் ஜியோப்பை பிடித்து இழுத்து, அவனிடம், “நமக்கு ஒரு எதிரி இருக்கிறான். அவன் மிகவும் வலிமையானவன் என்பதை புரிந்துகொள்” என்றேன். அவனும் “எனக்கு தெரியும் அப்பா, அவனுக்கு வலிமை இருக்கிறது ஆனால் அதிகாரம் இல்லை” என்று பதிலளித்தான். 

அந்த தருணத்தில், நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்டு, அவரை நாடுகிறவர்களின் வாழ்க்கையை மறுரூபமாக்குகிற இயேசுவை நான் நினைவுகூர்ந்தேன். அவர் பரமேறி செல்வதற்கு முன்பு தன்னுடைய சீஷர்களைப் பார்த்து, “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய்...” (மத்தேயு 28:18-19) என்று கொடுக்கப்பட்ட கட்டளையையும் நான் நினைவுகூர நேரிட்டது. 

சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த இயேசு, நமது கடந்தகாலம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் நாம் அவரிடத்தில் வருவதற்கு வழி செய்துள்ளார். அவர் நமது கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் தன் கையில் வைத்திருக்கிறார். அவர் எப்பொழுதும் நம்முடன் இருப்பார் என்று வாக்களிக்கப்பட்டிருப்பதால் (வச. 20), அவர் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவார் என்றும், நம்முடைய ஜீவியம் அவரது பலத்த கரங்களில் உள்ளது என்றும் நாம் உறுதியாக நம்பலாம். நாம் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நல்ல நம்பிக்கையை இயேசு நமக்கு தருகிறார். பிசாசும் உலகமும் தற்காலிகமான இவ்வுலகத்தில் சில வல்லமைகளைக் கொண்டு செயலாற்றலாம். ஆனால் “சகல அதிகாரமும்” என்றென்றும் இயேசுவுக்கே சொந்தமானது.